விழவயரும் விபுலாநந்தர்!

புண்ணியம் என்ன செய்தனை கல்லே
கண்ணியவாளன் கற்சிலை ஆனாய்
எண்ணிலடங்கா இறைபணியாளன்
தண்ணியவுளத்தான் தனியாய்வாளன்

ஏழிசை ஆய்ந்தான் மீனிசை ஆய்ந்தான்
யாழிசை ஆய்ந்தான் யாழ்நூல் தந்தான்
தாழிசை சொல்லும் மதங்கநூல் தந்தான்
ஆழிசை ஆர்க்கும் காரை மூதூரான்

பல்வகைக் கட்டுரை  நல்வகைக் கவிதை
சொல்வகை யறிந்து சோராதியற்றியோன்
பன்மொழிப் புலவோன் பார்புகழறிஞன்
நல்வகை ஆசான் நாடேற்றும் அதிபன்.

உள்ளத்தூய்மைக்கு வெண்ணிறமல்லிகை
கொள்ளையன்பில்  கங்கையில் ஓலை
பள்ளிகள் பாலனம் பண்ணியபுண்ணியன்
உள்ளிப்பாரதியை உயர்த்தி மெச்சியோன்.

நீரலைக்காற்றே வாரும் விபுலனின்
தோளைச் சேரும்
நேரலை வானே நின்று விண்வழிப்
பூவைத் தூவும்
நீரலை மீனே வளைந்து வாழ்த்தியே
கவிதை பாடு
பேரலை விபுலானந்தன் பெருவிழாப்
பாரீர்  வாரீர்.

திருமதி வேதநாயகி குணநாயகம். களுதாவளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *